உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனிடம், ஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான குமரிஅனந்தன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலிக்கு வருகை தந்தார். சனிக்கிழமை காலை தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரிஅனந்தனை ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா. ஆவுடையப்பன், சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது குமரிஅனந்தனிடம் தொலைபேசியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.