விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றதுடன் சனிக்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர திருநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் அருள்பாலித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராம்கோ தொழில் குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினமும் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெறும். ஐந்தாம் திருநாளான 12-ம் தேதி (புதன்கிழமை) இரவு ஐந்து கெருட சேவை நடைபெறும். 7-ம் திருநாளான 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நடைபெறும். 9-ம் திருநாளான 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறும்.