

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விருதுநகரை பூர்வீகமாக கொண்ட பெரிய கருப்பசாமி-வள்ளியம்மை ஆகியோருக்கு 1895ல் சங்கரலிங்கனார் மகனாக பிறந்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திர போராட்ட உரையைக் கேட்டு 1908 முதல் தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். காந்திஜியின் தலைமையில் நடந்த 1930-31ல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டம் உள்பட பல்வேறு தலைவர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டவர். தமிழகத்திற்கு மதராஸ் எனும் பெயர் இருத்தல் கூடாது என்றும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினார்.
அதையடுத்து தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27.7.1956ல் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இதையறிந்த அறிஞர் அண்ணா உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரை சந்தித்தார். அப்போது, அவரிடம் சில கருத்துக்களை வெளியிட்டு, அதில் முக்கியமாக தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்தார்.அதேபோல், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் உண்ணாவிரத்தை கைவிட வலியுறுத்தினர். அவர் கைவிட மறுத்த நிலையில் உடல் நிலை மோசமடைந்து 13.10.1956ல் உயிரிழந்தார். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அவரை பற்றி வருங்கால சந்ததியினர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் ஆகியோர் பேரவையில் வலியுறுத்தினர். அதையடுத்து தமிழக முதல்வர் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். விருதுநகர் நகராட்சி பூங்கா அருகில் இடம் ஒதுக்கி கட்டட பணிகள் நடைபெற்று வந்தது. அப்பணி முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டும், பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைக்கப்படாமலே இருந்தது.
இதைக் கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தியாகி சங்கரலிங்கானார் மணிமண்டபத்தை காணொலிக் காட்சி மூலம் பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்தார். அதையடுத்து, மணிமண்டபத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு ஆட்சியர் வே.ராஜாராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஆணையாளர் முஜிப்பூர் ரகுமான், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.