

விருதுநகர் அருகே விடுபட்டவர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் அருகே பாவாலி ஊராட்சியைச் சேர்ந்தது அய்யனார்காலனி. இங்கு 450-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2011-ல் 300 பேருக்கு விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவைகள் வழங்கப்பட்டது. அப்போது, புதிதாக குடும்ப அட்டைகள் பெற்ற 150 பேருக்கு விலையி்லலா பொருள்கள் வழங்கப்படவில்லையாம். அப்போது, அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசிடம் உத்தரவு வரவேண்டும் என்று கூறினார்களாம்.
தற்போது, பக்கத்தில் உள்ள வார்டுகளில் விடுபட்டவர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு இதுவரையில் வழங்கப்படாமல் உள்ளது. அதனால், விடுபட்டுப்போன குடும்ப அட்டைகளுக்கும் விலையில்லா பொருள்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, வட்டாட்சியர் மங்களநாதன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், விடுபட்டுப்போனவர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்குவதற்கு அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.