குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே காவேரி பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை (எ) அனுமுத்து (55) பீடி தொழிலாளி. இவருக்கு மல்லிகா (47) என்ற மனைவியும் தீபன் (23) என்ற மகனும் உள்ளனர். தீபன் மாற்றுத்திறனாளி (மூளைவளர்ச்சி குன்றியவர்)என கூறப்படுகிறது.
இந்நிலையில் மல்லிகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அம்மாவாசை கடந்த 6 மாதத்திற்கு முன்பு மல்லிகாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீஸார் அம்மாவாசையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவதற்கு பின் மல்லிகா பெரிய மண்டலவாடியில் உள்ள தாய் வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த அம்மாவாசையிடம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மண்டலவாடியிலேயே மனைவியுடம் தங்க வைத்தனர். ஆனால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சனை நடைபெற்று வந்ததுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அம்மாவாசை வீட்டிலிருந்த காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்து தனது மனைவி மல்லிகாவை சரமாரியாக உடலில் குத்தி கழுத்தை அறுத்து கொடுரமாக கொலை செய்தார். அப்பொழுது செய்வது அறியாமல் வீட்டில் இருந்த தீபனையும் கழுத்து அறுத்து கொன்றார். பின்னர் மல்லிகாவும் தீபனும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்ததை கண்டு தானும் தற்கொலை செய்து கொள்ள அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து மயங்கி விழுந்தார். வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்து ஜோலார்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் சாந்திலிங்கம் மற்றும் போலீஸார் தாய், மகன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதையும், அம்மாவாசை கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடைபெற்ற இடத்திற்கு வேலூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரனை மேற்கொண்டார். கொலை செய்யப்பட்ட மல்லிகா, தீபன் ஆகிய இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக மண்டலவாடி கிராமநிர்வாக அலுவலர் மீராதேவி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.