கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல இன்று முதல் ஒசூர் வந்ததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிச.4 ந் தேதி அவரது உடல் நலம் கவலைக்கிடமானது. இதனால் டிச.5 ம் தேதி காலை பதற்றமான சூழல் உருவானது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை முதல் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாலூர், கோலார், ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 100 க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில அரசு பேருந்துகள் ஒசூர் வந்து செல்கின்றன. இதே போல 300 க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பேருந்துகள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகள் அனைத்தும் கடந்த டிச.5 ம் தேதி காலை நிறுத்தப்பட்டன. இதனால் ஒசூரில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானர். வழக்கமாக ஓசூரில் இருந்து மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கர்நாடக அரசு பேருந்துகளில் அங்குள்ள களாசிபாளையம் பேருந்து நிலையம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தமிழக அரசு பேருந்துகளும் பெங்களூரு செல்லவில்லை. இதனால் யாரும் பெங்களூரு செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து சகஜநிலை திரும்பியது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல பெங்களூரு சென்றன. அதே போல 2 நாள்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் வழக்கம் போல ஒசூர் மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களுக்கு சென்று வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.