ஜிப்மரில் ரூ.6.75 கோடியில் புறநோயாளிகள் டயாலஸிஸ் சிகிச்சை பிரிவு:  ஆளுநர் கிரண்பேடி  திறந்து வைத்தார்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.6.75 கோடி செலவில் புறநோயாளிகளுக்கான சிறப்பு டயாலஸிஸ் சிகிச்சை பிரிவை 
Updated on
2 min read

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.6.75 கோடி செலவில் புறநோயாளிகளுக்கான சிறப்பு டயாலஸிஸ் சிகிச்சை பிரிவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதன்கிழமை திறந்து வைத்தார்.

ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமக்களுக்கு சிறுநீரக கோளாறுகள், விஷஜந்துக்கள் கடி போன்றவற்றால் அதிகம் பேருக்கு டயாலலிஸ் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் 2 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தரமான தொடர்ச்சியான டயாலஸிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரும் இதற்காக மாதம் ரூ.20 ஆயிரம் வரை செலவிட நேர்கிறது. இதனால் மத்திய சுகாதார அமைச்சகம் தேசிய டயாலஸிஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கண்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ5.4 கோடி வழங்கினார். மீதி 20 சதவீத தொகையை ஜிப்மர் மருத்துவமனை வழங்கியது. மொத்தம் ரூ.6.75 கோடி செலவில் 25 நவீன டயாலலிஸ் இயந்திரங்கள் கொண்ட புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதிய டயாலஸிஸ் சிகிச்சை பிரிவை திறந்து பேசுகையில்: ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பது அரசின் கடமையாகும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் பண வசதி உடையவர்கள் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். அப்போது தான் இதன் மூலம் ஏழைகளுக்கும் இலவச சிகிச்சை தரமுடியும். ஜிப்மர் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள இந்த டயாலஸிஸ் சிகிச்சை பிரிவு தொலைநோக்கான சிறந்த முன்னோடியான திட்டமாகும். இதற்காக முன்னாள் எம்.பி., பி.கண்ணன், இயக்குநர் பரிஜாவை பாராட்டுகிறேன் என்றார்.

முன்னாள் எம்.பி. கண்ணன் பேசுகையில்:

ஜிப்மர் மருத்துவமனையில் புதுசசேரி மட்டும் இல்லாமல் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுநீரக பாதிப்பு அதிகம் ஏற்படுவதால், டயாலஸிஸ் சிகிச்சை பிரிவை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தேன். இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கினேன். மேலும் விஷஜந்துக்கள் கடிக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை பிரிவை ஜிப்மரில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இயக்குநர் டாக்டர் பரிஜா தலைமை தாங்கி பேசியதாவது:

சிறுநீரக பாதிப்பு உடையோர், விஷஜந்துக்கள் கடிக்கு ஆளோனோர் சிறுநீரகவியல் துறையில் பரிசோதனை செய்த பின் டயாலலிஸ் சிகிச்சை செய்ய இங்கு அனுப்பப்படுவர். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக டயாலலிஸ் செய்யப்படும். ஏனைய நோயாளிகளுக்கு மிகவும் குறைந்த கட்டணமாக ரூ.800 மட்டுமே வசூலிக்கப்படும்.

தற்போது காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை என ஒரு ஷிப்ட் முறையில் இது இயங்கும். விரைவில் 3 ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் டயாலலிஸ் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அப்போது ஒரு நாளைக்கு 200 பேர் வரை முழுமையாக சிகிச்சை தர முடியும்.

இச்சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை ஜிப்மர் வழங்கும். மையத்தின் பராமரிப்பை தனியார் நிறுவனமான பிரெஸ்னியஸ் நெப்ரோகேர் மேற்கொள்ளும் என்றார் பரிஜா.

மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்திரன், சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீஜித் பரமேஸ்வரன், உடனிருந்தனர்.

உடலை தானம் செய்தார் முன்னாள் எம்.பி. கண்ணன்

திறப்பு விழாவின் முடிவில் தனது இறப்புக்கு பின் ஜிப்மர் மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்குவதாக முன்னாள் எம்.பி. கண்ணன் தெரிவித்தார். இதற்கான உறுதிமொழிப் படிவத்தையும் நிரப்பி இயக்குநர் பரிஜா, கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com