வேளாண் உற்பத்தியை பெருக்க அதிகாரிகள் பாடுபட வேண்டும்: முதல்வர் பேச்சு

புதுச்சேரியில் வேளாண் உற்பத்தியை பெருக்க அதிகாரிகள் பாடுபட வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் வேளாண் உற்பத்தியை பெருக்க அதிகாரிகள் பாடுபட வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி வேளாண் துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கருத்துக்களையும், குறைகளையும் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை வேளாண் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: இந்தியாவில் 70 சதவீத விவசாயிகள் உள்ளனர். இதனால் மத்தியில் எந்த அரசு இருந்தாலும்  விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் விவசாயத்திற்கு  சிறந்த கட்டமைப்பு, சிறந்த அதிகாரிகள், சிறந்த விவசாயிகள் உள்ளனர். வேளாண்துறையில் பணியாற்றுவது என்பது மேஜையின் கீழ் உட்கார்ந்து வேலை செய்வது அல்ல.

விவசாய நிலங்களுக்குச் நேரடியாக சென்று களப்பணியாற்ற வேண்டும். ஆனால் எந்த அதிகாரிகளும் அதனை செய்வதில்லை. பயிர் செய்வதில் நிறைய விஞ்ஞான யுக்திகள் உள்ளது. ஆனால் அது விவசாயிகளிடம் சென்று சேரவில்லை. வேளாண்துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் திறனை வளர்த்து கொள்வதில்லை.

சில அதிகாரிகள் விவசாயிகளை சந்திக்க நேரம் கூட ஒதுக்கித்தருவதில்லை. கோப்புகளை ஐஏஎஸ் அதிகாரிகள் பார்த்து கொள்வர். நாம் அரிசியை ஆந்திராவில் இருந்தும், காய்கறியை பெங்களூர், கோயம்பத்தூரில் இருந்தும் வாங்குகின்றோம். புதுச்சேரி அரசு இயந்திரம் பழுதாகி உள்ளது. நாங்கள் (ஆட்சியாளர்கள்) வேகமாக ஓடினால் அரசு இயந்திரம் பின்னால் வருகிறது. மத்திய அரசின் கதவை தட்டினால்தான் நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டத்தில் புதுச்சேரி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுச்சேரிக்கான இழப்பீடு தானாகவே வரும். மத்திய உள்துறை அமைச்சகத்தை சென்று கேட்கவேண்டியதில்லை.

புதுச்சேரிக்கு தேவையான பொருட்களை புதுச்சேரியிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.  அதற்கு தேவையான முயற்சிகளை எடுங்கள். ஆலோசனைகளை கூறுங்கள். விவசாயத்தில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அனைவரும் முனைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லால் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார். வேளாண்மை துறை அதிகாரிகள் பேசியதாவது:

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் வேளாண்துறை அதிகாரிகள் எங்குள்ளனர், என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கப்படுகிறது. அதை புதுச்சேரியிலும் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் யாரும் களப்பணிக்கு செல்லாமல் ஏமாற்ற முடியாது.

சம்பள உயர்வை வழங்க வேண்டும். விவசாயத்திலும் பாலிடெக்னிக் படிப்பு கொண்டுவர வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.70-க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ சர்க்கரை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாற்றி லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com