புதுச்சேரி: சுயமாகவும், நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்படும் அதிகாரிகளே புதுச்சேரிக்கு தேவை என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
3 நாள்கள் புதுதில்லியில் பயணம் முடித்து விட்டு திரும்பிய அவர் இன்று வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள அரசு அதிகாரிகள் களத்தில் அதிகம் சென்று பணிபுரிவதில்லை. பொதுமக்களுடன் நேராக களத்துக்கு சென்று நாள்தோறும் பணிபுரிய வேண்டும். மேலதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் அனைவரும் ஓரே மாதிரியாக தான் உள்ளனர்.
பணியை செய்தமைக்காக கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டு, சட்டப்பேரவை உரிமைகளை மீறியதாக புகார் கூறப்பட்ட நிலையில் அதிகாரியின் குடும்பம் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் அதிக கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்டுள்ளது. சுயமாகவும், நேர்மையாகவும் செயல்படும் அதிகாரிகள் தேவை. மாற்றத்தை செய்ய அச்சப்படாத அதிகாரிகள் வேண்டும்.
அனைத்து திட்டங்களும் மக்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும். இல்லையென்றால் எந்த மாற்றமும் நேராது. புதுச்சேரிக்கு புதிய மனப்பான்மை தேவைப்படுகிறது.
புதிய மனப்பாங்குடன் கூடிய தலைமை தேவை. அதுவரை 10 சிறப்பான நகரங்கள் பட்டியலில் புதுவை இடம் பெறாது. எனினும் சில பகுதிகள் தூய்மையாக உள்ளன. ஆனால் கிராமப்புறங்கள் மீது போதிய கவனம் செலுத்தாத நிலை உள்ளது.
கடந்த 74 வாரங்களில் அடிமட்ட அளவில் பஞ்சாயத்து அமைப்பு இல்லை. முந்தைய தேர்தலுக்கு பின் மக்கள் தங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளையே பார்க்காத நிலை உள்ளது.
இந்நிலையை மாற்ற நிர்வாக உறுதி தேவைப்படுகிறது என்றார் கிரண்பேடி.