/

புதுச்சேரி துறைமுகத்தை இயக்க வரைவு திட்டம்: ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி துறைமுகத்தை இயக்குவது குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த ஆளுநர் கிரண்பேடி வரைவுத் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார்.

News image
Updated On :27 மே 2017, 2:57 pm

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தை இயக்குவது குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த ஆளுநர் கிரண்பேடி வரைவுத் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார்.

புதுச்சேரி துறைமுக முகத்துவாரம் மத்திய அரசின் டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அப்பணிகளை முழுமையாக ஆய்வு செய்த கிரண்பேடி துரிதமாக ஆழப்படுத்தும் பணியை முடிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் கடற்கரையில் மணற்பரப்பை உருவாக்கும் பணியையும் பார்வையிட்டார்.

பின்னர் புதுச்சேரி துறைமுக இயக்கம் தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார், துறைமுகத்தை சீராக இயக்குவது தொடர்பாக வரைவு திட்டத்தை தயாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

அதில் துறைமுகத்தில் இருந்து நடைபெறும் வாகனப் போக்குவரத்து, போலீஸ் பாதுகாப்பு சாவடிகள் அமைத்தல், வழிகாட்டி பலகைகள், மின்னணு பணபரிவர்த்தனை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், எரிபொருள் நிரப்பும் இடம், கப்பல்கள் பழுதுபார்க்கும் பகுதி, முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் ஆண்டுத் திட்டம், தேவையான நபர்களை நியமித்தல், உள்ளிட்டவை இடம் பெற வேண்டும்.

துறைமுகத்தை இயக்குவதற்கு முன்பு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து விட வேண்டும் என உத்தரவிட்டார். துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் சித்தார்த்தகுமார், உதவிப் பொறியாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் துறைமுக நிலை குறித்து விளக்கினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.