காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆயுத கடத்தல்காரரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த சட்டவிரோதமான 21 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் டிக்ரி கிராசிங் என்எச்-24 சாலையில், "ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விற்பனை செய்வதற்காக ஒரு பெரிய பையை சுமந்துகொண்டு ஒருவர் சென்றுகொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த நபரை சுற்றிவளைத்த போலீஸார், அவரிடமிருந்த பைகளை சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது அவரது பையில் பதுக்கிவைத்திருந்த 21 வெவ்வேறு ரக நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நபர் மீது ஆயுத சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஷம்லி மாவட்டத்தை சேர்ந்த முகமது கவுசர். கெய்ராவிலிருந்து துப்பாக்கிகளை வாங்கி, நொய்டா, விஜய் நகர் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் சட்டவிரோத கும்பல்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரத்துக்கு ஆயுதங்கள் விற்று வந்ததாகவும் போலீஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் தெரிவித்தார்.
நவம்பர் 26-ஆம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தல்களுக்கு முன்னர் தங்களது குழுவினருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக சிலர் குழுக்களை அமைத்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.