புதுதில்லி: மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். 4 இணையமைச்சர்கள், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். பாதுகாப்புத் துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.
ரயில்வே துறையின் புதிய அமைச்சராக, பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். 9 புதிய அமைச்சர்கள் உள்பட 13 பேர், அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக, நிதித் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏற்கனவே, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.