டேராடூன்: இந்தியாவுக்கு வருகை புரிந்துபள்ள நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தரகண்ட் மாநில ஜி.பி. பன்ட் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
அந்நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அண்டை தேசமும், நெருங்கிய நட்பு தேசமுமான இந்தியாவுக்கு சர்மா ஒலி மற்றும் அவரது மனைவி ராதிகா ஷாக்யாவுடன் சுற்றுப் பயணம் வந்துள்ளார்.
தில்லிக்கு வெள்ளிக்கிழமை காலையில் (ஏப் 6) வந்த அவரை விமான நிலையத்துக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இருநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடையே தில்லியில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராணுவம், இணைப்பு வழி திட்டங்கள், வர்த்தகம், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், குறிப்பாக நேபாள தலைநகர் காட்மாண்டுவை இந்தியாவுடன் இணைத்திடும் வகையில் புதிய ரயில்பாதை அமைப்பதற்கு இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜி.பி. பன்ட் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பன்நகரில் வந்த ஒலி, பிரீடர் விதை உற்பத்தி மையம் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை பார்வையிட்டார்.