பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் 

மதுரையில் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:16 am

DIN

மதுரையில் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா, கடந்த 15-ஆம் தேதி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது. இதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை எதிர்சேவையாக வரவேற்றனர்.

மாலையில் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர்.

இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு பட்டு சார்த்தப்பட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவித்து, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தங்கக் குதிரை வாகனத்தில் இன்று அதிகாலையில் புறப்பட்ட கள்ளழகர், தல்லாகுளம் சப்பரத்தடி கருப்பணசாமி கோயில் அருகே வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் அதிகாலை 5.50 மணிக்கு இறங்கினார். கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீரராகவ பெருமாள். 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். கள்ளழகரை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றங்கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்திருந்ததால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.