
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். 69 பேர் காயமடைந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரின் அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரங்களில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று திங்கள்கிழமை பிற்பகலில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏதென்ஸ் நகருக்கு கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டி என்ற பகுதியில் சாலையில் 4 பேர் உயிரிழந்து கிடந்து உள்ளனர் என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்களுடன் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் காட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பொது மக்கள் தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது போஸ்னியா நாட்டிற்கான சுற்று பயணத்தினை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.