மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 45 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 10 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 20 அடி, பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: கொடுமுடியாறு அணையில் அதிகபட்சமாக 170 மி.மீ, பாபநாசம் அணையில் 120 மி.மீ, சேர்வலாறு அணையில் 81 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 93 மி.மீ, அடவிநயினார் அணையில் 80 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 32.6 மி.மீ, கடனாநதி அணையில் 32 மி.மீ, ராமநதி அணையில் 32 மி.மீ, கருப்பாநதி அணையில் 20 மி,மீ, நம்பியாறு அணையில் 15 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு}32 மி.மீ, அம்பாசமுத்திரம்}9.8 மி.மீ, ஆய்க்குடி}15.4 மி.மீ, ராதாபுரம்}23 மி,மீ, செங்கோட்டை}41 மி,மீ, தென்காசி 31 மி,மீ, சேரன்மகாதேவியில் 2.2 மி.மீ.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 6100 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2400 கனஅடி, கடனாநதி அணைக்கு 249 கனஅடி, ராமநதி அணைக்கு 150 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 180 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணைக்கு 66.20 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 431 கனஅடி நீர்வரத்து இருந்தது.
இதையடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 50.70 அடியாகவும் உயர்ந்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக சேர்வலாறு அணையில் நீர் சேமித்து வைக்கப்படவில்லை. தற்போது பணிகள் முடிவடைந்ததால் அணையில் நீரை சேமித்து வைக்குமாறு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அணைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 45 அடி நீர்மட்டம் உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 65.29 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததை அடுத்து நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 76.00 அடியாக உள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 55 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 63.00 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 80.00 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 20 அடி உயர்ந்து 32 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 4.50அடி உயர்ந்து 26.50 அடியாகவும் இருந்தது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு தாமிரவருணி ஆற்றில் 920.71 கனஅடி, மணிமுத்தாறு அணையில் விநாடிக்கு 45 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.