ஹைதராபாத்: உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹைதராபாத்தை சேர்ந்த அருணா புத்தா ரெட்டி (22) ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வால்ட் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி 13.649 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
சுலோவேனியா வீராங்கனை டிஜாசா கைஸ்லெப் 13.800 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கமும், ஆஸ்திரேலியா வீராங்கனை எமிலி ஒயிட்ஹெட் 13.699 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.
அருணா புத்தா ரெட்டி வென்ற முதல் சர்வதேச பதக்கம் இது. உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி என்ற வரலாறு படைத்த அருணா ரெட்டி, தலைமைசெயலகத்தில் முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அருணா ரெட்டியை பாராட்டினார்.
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக முதல்வர் சந்திர செகர ராவ் அறிவித்தார். பயிற்சியாளர் பிரிஜ் கிஷோருக்கு சில உதவிகளை அளிக்கும்படியும் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தினார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பத்மா ராவ், தெலங்கானா விளையாட்டு ஆணைய தலைவர் ஏ.வெங்கடேஸ்வர ரெட்டி, அருணா ரெட்டி தாயின் சுபாத்ரம்மா மற்றும் அவளுடைய சகோதரி பவானி ஆகியோரும் உடன் இருந்தனர்.