

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தெற்கு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு காரணத்திற்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அதிகாரி கூறுகையில், அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து, போலீஸார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் அளித்த ஆலோசனையின் படி பாதுகாப்பு காரணத்திற்காகவும், பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தெற்கு காஷ்மீரில் ரயில் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தெற்கு காஷ்மீரில் பட்ஹாம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காசிகுந்த் பகுதியிலிருந்து பனிஹால் பகுதிக்கு இயங்கி வரும் ரயில்கள் சேவை இன்று சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வடக்கு காஷ்மீர் பகுதியில் எப்போதும் போல ரயில்கள் இயங்கும் எனக் கூறினார்.
பாதுகாப்பு காரணத்திற்காக காஷ்மீர் பகுதியில் கடந்த வருடம் 50-க்கும் அதிகமான முறை ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.