ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்: கருணாஸ் அதிரடி பேட்டி

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்: கருணாஸ் அதிரடி பேட்டி

என் மீது 1000 வழக்குகள் போட்டாலும் அதையும் எதிர்கொள்வேன் என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டப்பேரவை


என் மீது 1000 வழக்குகள் போட்டாலும் அதையும் எதிர்கொள்வேன் என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் ஆணையர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 23-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது ரசிகர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கிலும் கருணாஸ் ஜாமீன் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கிற்காக கருணாஸ் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை ஆனார். இதைத் தொடர்ந்து சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தனது அமைப்பினருடன் சென்று கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என் மீது இன்னும் 1000 வழக்குகள் போட்டாலும் அதையும் எதிர்கொள்வேன். என்மீதான வழக்கில் உண்மை நின்றது, நீதி வென்றது என்று கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், கூவத்தூரில் நடந்தவற்றை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூற தயார். காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிய மேற்கொண்ட வேகத்தை மக்கள் பணியில் காட்டினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஊடகங்களில் பேசுவதாலும், ஸ்டெர்லைட் குறித்து நான் கருத்து தெரிவித்ததால் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார் கருணாஸ்.

கடந்தாண்டு நடந்த சம்பவங்களில் கூட காவல்துறை என் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தனர் என்றார்.

கடந்த 16-ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த அதிமுக அரசாங்கம் எப்படி அமைந்தது என்று பேசினார் கருணாஸ். இதுகுறித்து அப்போதே கருணாஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கூவத்தூரில் நடந்தவற்றை உயர்நீதிமன்றத்தில்தான் தெரிவிப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com