தூத்துக்குடியில் விசாரணை முடிந்து மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பை மாலத்தீவு அரசிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சிறிய வகை சரக்குக் கப்பலில் கடலோரக் காவல் படையினர் மேற்கொண்ட சோதனையில், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்த கடலோரக் காவல் படையினர் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்த அகமது அதீப்பிடம் தில்லி மற்றும் சென்னையில் உள்ள குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் அகமது அதீப், ஏற்கெனவே ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்காக மாலத்தீவு அரசின் அனுமதி பெற்று சென்னை வந்ததாகவும், தற்போதும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவே தூத்துக்குடி வந்து சென்னை செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
மேலும் அகமது அதீப்பிடம் ஒரு போலி பாஸ்போர்ட், சர்வதேச அளவில் பயன்படுத்தக்கூடிய 6 வங்கி ஏடிஎம் அட்டைகள், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு சாட்டிலைட் தொலைபேசி, 1500 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை இருந்தது. மேலும் அகமது அதீப்பிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலை அதிகாரிகள் தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து அகமது அதீப்பை மாலத்தீவு ராணுவத்திடம் ஒப்படைக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தூத்துக்குடியில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அனைத்து விசாரணைகளும் முடிந்து தூத்துக்குடியிலிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2 நாள் கடல்வழி பயணத்துக்கு பின் மாலத்தீவு அரசு அதிகாரிகளிடம் அகமது அதீப்பை ஒப்படைத்தனர்.