உன்னாவ் பெண்ணின் கார் விபத்து விவகாரம்: பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப் பதிவு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ
உன்னாவ் பெண்ணின் கார் விபத்து விவகாரம்: பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப் பதிவு
Published on
Updated on
1 min read


புதுதில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண், ரே பரேலி சிறையில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞருடன் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அவரது உறவினர்களான ஷீலா (50), புஷ்பா (45) ஆகிய இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், இது விபத்து அல்ல. எங்கள் அனைவரையும் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி என்று கூறினார். வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி அளிக்குமாறு எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தரப்பிலிருந்து அடிக்கடி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பெண்ணின் மாமாவான மகேஷ் சிங் கூறினார். 

இதனிடையே, அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த துப்பாக்கிய ஏந்திய ஒரு காவலரும், இரு பெண் காவலர்களும் சம்பவத்தின்போது அவர்களுடன் இல்லை. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் வர்மா கூறினார். 

இந்த கார் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை கடிதத்தை உள்துறை முதன்மைச் செயலரிடம் உத்தரப் பிரதேச அரசு அளித்தது. 

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரத்தில் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் அடையாளம் தெரியாத 20 நபர்கள் மீது கூட்டு சதி, கொலை, மிரட்டுதல் மற்றும் கொலைமுயற்சி உட்பட பிரிவுகளில் சிபிஐ வழக்கப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com