மதுரை: மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் நிவாரண உதவி இன்றி பட்டினியால் வாடுவதால் நிவாரண உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் அருகே உள்ள பெத்த கொண்டான் சந்திரலேகா நகரில் 500க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வைகையாற்றின் கரையோரத்தில் வசித்து வந்த இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்போதுள்ள சந்திரலேகா நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களது பிரதான தொழில் சலவை தொழிலாகும்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சலவை தொழிலாளர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இதனால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் இங்கு வசிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரில் வெகுசிலரே சலவைத் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு நிவாரணத்தொகை ரேஷன் பொருள் என எதுவுமே வழங்கப்படவில்லை. இதனால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சலவைத் தொழிலாளர்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சலவைத் தொழிலாளர்களுக்கு வேண்டிய அரிசி மளிகை பொருள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.