சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும். தடையை மீறி ஊர்வலம் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.