புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி உயிர் இழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
முதலாம் ஆண்டு புல்வாமா நினைவுத் தினத்தையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "2019 இல் இதே நாளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கர தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களையும், அவர்களின் தியாகத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது" என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது என்றும், "இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து போராட அனைவரும் உறுதிபூண்டுள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.