பருவாச்சி ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு: செல்போன் கோபுரம் மீதேறி போராட்டம்

பவானி ஊராட்சி ஒன்றியம், பருவாச்சி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி ஒரு தரப்பினர்
பருவாச்சி ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு: செல்போன் கோபுரம் மீதேறி போராட்டம்
Updated on
1 min read


பவானி: பவானி ஊராட்சி ஒன்றியம், பருவாச்சி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டம் மற்றும் செல்போன் கோபுரத்தின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டதால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது.

பருவாச்சி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு, 9 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், தலைவருடன் சேர்த்து 10 வாக்குகளைக் கொண்டு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 6-வது வார்டில் வென்ற சுப்பிரமணியும், 2-வது வார்டில் வென்ற அய்யண்ணனும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் இருவரும் தலா 5 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது.

இதில், சுப்பிரமணி துணைத் தலைவராக வெற்றி பெற்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அய்யண்ணனின் ஆதரவாளர்கள் இத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி ஊராட்சி அலுவலகம் முன்பாக பவானி - அந்தியூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல்துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேர்தல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்ளாததால், ஏமாற்றமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, குணா, கண்ணன், சுப்பிரமணி மற்றும் நடராஜ் ஆகியோர் அருகாமையில் இருந்த செல்போன் கோபுரம் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீஸார் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மாரியம்மாள், ஜெயந்தில், அய்யண்ணன், சரஸ்வதி, பூங்கொடி ஆகிய 5 வார்டு உறுப்பினர்களும் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களின் பதவியை ராஜினமா செய்வதாகவும் அறிவித்துள்ளனர். தேர்தல் முறைகேடு புகாரால் பருவாச்சியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com