மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் நாகராஜ். இவர் மாட்டுதாவணி காய்கனி சந்தையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தமிழரசி 26, என்ற மனைவியும், 8 வயதில் மகன் மற்றம் 6 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதல் அவரது மனைவி தமிழரசியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நாகராஜ் நேற்று மாலை மனைவி தமிழரசியின் செல்லிடப்பேசிக்கு தொடர்புக் கொண்டுள்ளார். அப்போது ஆண் நபர் செல்லிடப் பேசியை எடுத்து, தான் பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளர் என்றும், உங்கள் மனைவி தமிழரசி எங்கள் நிறுவனத்தில் இருந்து கடனாக ரூ.2 லட்சத்தை வேறு நபருக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த பணத்தை கொடுத்து உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள் எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து நாகராஜ் பணத்தை ஏற்பாடு செய்யும் வேலையில் இறங்கினார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசியை கடத்திய நபர், நாகராஜை தொடர்புக் கொண்டு ரூ. 15 லட்சம் கொடுத்தால் தான் உன் மனைவியை ஒப்படைக்க முடியும், அல்லது அவருக்கு நான் உறுதி கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை வேறு விதமாக செல்வதை உணர்ந்த, நாகராஜ் செல்லூர் காவல்நிலையத்தில் மனைவி கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை ரூ. 15 லட்சம் கேட்டு பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.