தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அருகே விஷம் கொடுத்ததில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் குழந்தைகளின் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.
பேராவூரணி அருகிலுள்ள இரண்டாம்புளிக்காட்டைச் சேர்ந்தவர் கதிரவன் (30) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் மங்களத்தை சேர்ந்த சுகன்யா(26) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வருனிகாஸ்ரீ(7), ஜனனிகாஸ்ரீ(5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வருடமாக ஆர்.எஸ் மங்களத்தில் உள்ள தாய் வீட்டில் சுகன்யா இருந்து வருகிறார்.
கரோனா பொதுமுடக்கத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்ட கதிரவன் கஷ்டம் தாங்காமல் கடந்த 4 ஆம் தேதி எலுமிச்சை சாதத்தில் விஷத்தை கலந்து இரண்டு குழத்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர். கதிரவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.