கரோனா தீநுண்மி பரவலை தடுக்கும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கத்தை அறிவித்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களை மாநில அரசுகள் விருப்பப்படி திறந்து கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்கக்கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தடையை மீறி அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து விடலாம் என கருதி திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு பலத்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.