உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89 லட்சத்து 22 ஆயிரத்து 027-க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் புதிதாக 13,573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்தை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 89,22,027 ஆகவும், புதிதாக 601 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,867 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 47,43,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 36,57,123 பேர்களில் 54,505 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 23,30,578 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,21,980 பேர் பலியாகியுள்ளனர். 972,941 குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 12,35,657 பேர்களில் 16,529 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 10,70,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50,058 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5,76,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3,95,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,281 பேர் பலியாகியுள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.