/

மரவள்ளிப் பயிர்களை தீயிட்டு அழிக்கும் விவசாயிகள்!

மரவள்ளியில் புதிய வகை மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பாதிப்புக்குள்ளான பயிர்களை தீயிட்டு அழிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

News image
சேந்தமங்கலம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பூச்சித் தாக்கிய மரவள்ளி பயிர்களை தீயிட்டு அழிக்கும் விவசாயிகள்.
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN


நாமக்கல்: மரவள்ளியில் புதிய வகை மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பாதிப்புக்குள்ளான பயிர்களை தீயிட்டு அழிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்மற்றும் நாமகிரிப்பேட்டைவட்டாரங்களை சேர்ந்த கல்குறிச்சி, ஒடுவங்குறிச்சி, தொ.பச்சுடையாம்பாளையம், தொப்பப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் மரவள்ளி பயிர்களைமாவுப்பூச்சிகள் தாக்கியதுஇதனால்பயிரிட்ட விவசாயிகள் மிகவும்பாதிப்படைந்தனர். ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1,750 வீதம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உயர்அதிகாரிகள், பூச்சியியல் வல்லுநர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

இப்பயிர்களிலிருந்து மாவுப்பூச்சி மாதிரிகள் எடுக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் ஆராய்ச்சிக்காக பெங்களூரில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி நிலைய தேசிய பூச்சியியல் மூலாதார அமைவகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் ஆராய்ச்சி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிராமங்களிலிருந்து அனுப்பப்பட்ட சோதனை முடிவில் மரவள்ளிப் பயிரில் பரவியிருப்பது பீனோகாக்கஸ் மானிஹாட்டி எனும் புதிய வகை ஆப்பிரிக்க இன மாவுப்பூச்சியாகும். இவ்வகை மாவுப்பூச்சிகள் ஆப்பிரிக்காவிலிருந்து நடவுக் குச்சிகள் மூலம் கேரளம் வழியாக தமிழ்நாட்டிற்குள் பரவியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Story image

சேந்தமங்கலம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பூச்சித் தாக்கிய மரவள்ளி பயிர்களை தீயிட்டு அழிக்கும் விவசாயிகள்.


இது குறித்து தேசிய பூச்சியியல்மூலாதார ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தின் நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் வட்டாரங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, வறட்சியுடன் கூடிய அதீத வெப்பநிலை மற்றும் குறைவான ஈரப்பதத்தின் காரணமாக 9.2 சதவீதத்திலிருந்து 41.6 சதவீத அளவில் மாறி இப்பகுதியில் மரவள்ளிப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மரவள்ளியில் ஆரம்ப கட்டத்தில் தென்பட்ட பப்பாளி இன மாவுப்பூச்சிகள் அசரோபேகஸ்பப்பாயே எனும் ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்தப்பட்து. ஆனால் இவ்வகை ஒட்டுண்ணிகளால் பீனோகாக்கஸ்மானிஹாட்டி என்ற புதிய வகை மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. இது புதிய வகை மாவுப்பூச்சிகள் பரவலுக்கு முக்கியகாரணம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட முள்ளுவாடிரகம் மற்றும் வெள்ளை தாய்லாந்து ஆகிய மரவள்ளி ரகங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக புதியவகை மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்டமரவள்ளி செடிகளை உடனடியாக தீயிட்டு எரித்து அப்புறப்படுத்திய பின்பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதைமிக முக்கிய நோக்கமாக விவசாயிகள் கொள்ள வேண்டும். மரவள்ளி விதைக்குச்சிகள் மற்றும் இலைகளை மாவுப்பூச்சி பாதிக்கப்பட்டபகுதியிலிருந்து எடுத்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


மரவள்ளி பயிரிடப்பட்ட பிற பகுதிகளில் மாவுப்பூச்சிகள் பரவாமல் தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். மாவுப்பூச்சியின் இயற்கைஎதிரிகளான பொறி வண்டு போன்ற பூச்சிகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். ஒட்டுண்ணிகளால் மட்டுமே இவ்வகை மாவுப்பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அசாடிராக்டின் எனும் வேம்பு சார்ந்த மருந்தினை ஒரு லிட்டர் நீரில் 5 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.