அவனியாபுரத்தை அடுத்த செம்பூரணியில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மகனுக்கு ரூ.6 லட்சம் செலவில் மெழுகுச் சிலை அமைத்து அவரது தந்தை மரியாதை செய்தார்.
அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா மற்றும் கீதா ஆகிய 2 மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மாரிகணேஷுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மாரிகணேஷ் சிறுவயது முதலே வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் அதீத அன்பு செலுத்தியுள்ளனர்.
இதனிடையே மோட்டார் சைக்கிள் பந்தையங்களில் ஈடுபாடுள்ள மாரிகணேஷ் கோவா, மும்பை, புதுதில்லி போன்ற இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு நவ.18 இல் உயிரிழந்தார். இதையடுத்து மாரிகணேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது தந்தை முருகேசன் ரூ.6 லட்சம் செலவில் மாரிகணேசின் தத்ரூபமாக மெழுகுச் சிலை செய்து அவனியாபுரத்தில் உள்ள செம்பூரணி சாலையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழிபாட்டுக்கு வைத்தார்.
தொடர்ந்து மாரிகணேஷின் உருவசிலையை காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மெழுகுச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.