உத்தரபிரதேசத்தில் கரோனா பொதுமுடக்கத்தில் வேலை இழந்ததால் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் ராகேஷ் குமார் (வயது 39). இவர் தனது மனைவி அர்சனா, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கரோனா பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குமாரும், அர்சனாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து குமாரின் தாயார் கூறுகையில், எனது மகன் ஏப்ரல் மாதம் முதல் வேலை இல்லாமல் இருந்தான். கடந்த புதன்கிழமை மாலை பண பிரச்சனை குறித்து வருத்தத்துடன் இருந்தான்.
இந்நிலையில், இரவு இரண்டு பேரக்குழந்தைகளுடன் நான் தூங்கிவிட்டேன், குமாரும் அர்சனாவும் அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர். வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது என கூறினார்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பல லட்ச மக்கள் வேலை இழந்துள்ளனர். பலர் மனச்சோர்வால் தற்கொலை செய்து வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.