கரோனா பரவலுக்கு மத்தியில், மேற்கு வங்க 7, 8ஆம் கட்டத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இதில், 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 2 கட்டத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய சுஷில் சந்திரா பேசியது,
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக 6 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தேர்தல்களில் வாக்காளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார், மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.