திருமங்கலம் பகுதியில் கண்மாயில் குளிக்கச்சென்ற லாரி டிரைவர் மற்றும் அவரது இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமங்கலத்தை அடுத்த கீழக்கோட்டை லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகர்சாமி (வயது 35). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலெட்சுமி(28). இவர்களுக்கு சங்கீதா(10), யோக வர்சினி(7), மகா முகேஷ்(4) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி தனலெட்சுமி கூலிவேலைக்கு சென்ற நிலையில் அழகர்சாமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு புதுக்குளம் கண்மாய்க்கு செவ்வாய்கிழமை மதியம் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அழகர்சாமி மற்றும் மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் நான்கு பேர்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அழகர்சாமி, சங்கீதா, மகா முகேஷ் ஆகிய மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். குழந்தை யோக வர்சினிக்கு தீவிர சிகிச்சையளிகப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இரு குழந்தைகள் உரியிழந்தது கிராமத்தினரை சோதத்தில் ஆழ்த்தியது.