டிராக்டர் பேரணியை அமைதியாக நடத்த பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்
தில்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் 11 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டனா்.
புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. அச்சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. அவா்களது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்கவில்லை.
இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26-ஆம் தேதியில் தில்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்தனா்.
இந்நிலையில், காஜிப்பூா், சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளிலிருந்து பேரணி தொடங்கி, அதே இடத்துக்கு மீண்டும் வந்து பேரணியை நிறைவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதனிடையே, குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.