/

நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:21 am

DIN

தமிழகத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.6.2021) தலைமைச் செயலகத்தில், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்.

இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள்.

மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/-த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி. சந்திரமோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வ.கலையரசி, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் தேவா, உறுப்பினர் செயலாளர் தங்கவேலு, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.