திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 15வார்டுகளில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காய்கறி மற்றும் பூ விவசாயம் அதிகளவில் உள்ள ஆரணியில் இருந்து வியாபாரிகள் நாள்தோறும் கோயம்பேடு மொத்த சந்தைக்கு சென்று வருவது வாடிக்கையாக உள்ளது.
இதேபோல அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என அரசு பள்ளிகளுக்கு நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். ஆரணியில் இருந்து நாள்தோறும் திருவள்ளூர், ஆவடி, சென்னை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து செல்ல கூடிய ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்துகள் அனைத்தும் பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டு செல்கின்றன. பயணிகளும் சாலையிலேயே பேருந்திற்காக காத்திருந்து செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் கோடை காலங்களில் வெயிலிலும், மழை காலங்களில் மழையில் நனைந்தபடியே காத்திருந்து பேருந்துகளில் ஏறி செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், வியாபாரிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் ஆரணியில் குறுகிய இடத்தில் காத்திருந்து பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஆரணியில் பேருந்து நிலையம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி நடைபெற்ற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று ஆரணியில் பேருந்து நிலையத்தை கட்டி பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.