போலிச்சாமியார்களின் ஆதிக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலிச்சாமியார்கள், தங்களை நவீன யுகக் கடவுள்களாக சித்தரித்துக் கொண்டு அப்பாவி கிராம மக்களையும், மெத்தப் படித்த அறிவாளிகளையும் ஏமாற்றி வருகிறார்கள், பாபா ராம் ரஹீமைப் போன்ற அத்தகைய போலிச்சாமியார்கள் பிடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று ; ஜோதிஷ பீடத்தின் தலைமைப் பொறுப்பை அதாவது அடுத்த சங்கராச்சாரியாராகப் பதவியேற்க ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி மற்றும் ஸ்வாமி ஸ்வரூபானந்த் இருவரது பெயரும் நீதிமன்றத்தில் கூட்டாகப் பரிந்துரைக்கப் பட்டது. அந்தப் பரிந்துரையை நிராகரித்த உயர்நீதிமன்றம்... புதிய தகுதி வாய்ந்த சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க மடத்துக்கு மூன்று மாதங்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.
ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் போது ‘மீதமிருக்கும் 3 பீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து ஜோதிஷ பீடத்துக்கான தகுதி வாய்ந்த குரு ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். ’ என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமல்ல, புது சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க பாரத தேசம் முழுமைக்குமான பாரத தர்ம மகா மண்டலத்தைச் சேர்ந்த குருமார்களும், காசி வித்வத் பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆன்மீக குருக்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thanks to Daily post