அடுத்து என்ன செய்யப் போகிறார் குலாம் நபி ஆசாத்? 

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகக் கூறி சோனியா காந்தியிடம் அளித்திருக்கும் குலாம் நபி ஆசாத் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன செய்யப் போகிறார் குலாம் நபி ஆசாத்? 
என்ன செய்யப் போகிறார் குலாம் நபி ஆசாத்? 


காங்கிரஸ் கட்சியில் நடக்கும் பல்வேறு விஷயங்களை மிக நீண்ட பதவி விலகல் கடிதத்தில் எழுதி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகக் கூறி சோனியா காந்தியிடம் அளித்திருக்கும் குலாம் நபி ஆசாத் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார்.

பதவி விலகல் குறித்து சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியிருக்கும் மிக நீண்ட கடிதத்தில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களும், அதற்கான காரணங்களும் என மிக விரிவான அவரது பார்வையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகுவதற்கும், கட்சியின் பின்னடைவுக்கும் மிக முக்கிய காரணமே ராகுல் காந்திதான் என்று கூறியிருக்கும் குலாம் நபி ஆசாத், முதிர்ச்சியற்ற, குழந்தைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும், கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டதாகவும் ராகுல் மீது பகிரங்கக் குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ள அவர், தனது சொந்த ஊரில் சொந்தக் கட்சித் தொடங்க இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான் ஜம்மு-காஷ்மீருக்கே திரும்புகிறேன். எனது மாநிலத்தில் நான் எனது சொந்தக் கட்சியைத் தொடங்கவிருக்கிறேன். தேசியக் கட்சியாவது பற்றியெல்லாம் பிறகு பார்க்கலாம் என்று ஆங்கில ஊடகமொன்றில் அவர் கூறியதாக மேற்கொள்காட்டியிருக்கிறார்கள்.

இந்த கூற்றுக்கும், ஜம்மு- காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருப்பதும், ஒன்றோடு ஒன்று தொடர்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

73 வயதாகும் குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரில் கட்சியின் முக்கிய பதவிக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது பல பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த கட்சி விலகல் முடிவு இருக்கலாம் என்றும், காங்கிரஸ் தலைமையை தேர்வு செய்வதற்கான தேர்தல் மேலும் தாமதமானதால் ஏற்பட்ட அதிருப்தியும் குலாம் நபி ஆசாத்தை இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐந்து பக்கத்துக்கு எழுதியிருக்கும் பதவி விலகல் கடிதத்தில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை புகழ்ந்திருக்கும் குலாம் நபி ஆசாத், ராகுல் மீது காரசார புகாரை முன் வைக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடையக் காரணமே ராகுல் காந்திதான். அதுதான் கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அது முதல் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற போராடி வருகிறது.

மிக துரதிருஷ்டவசமாக அரசியலுக்குள் ராகுல் காந்தி நுழைந்தார், குறிப்பாக, உங்களால், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல், கட்சியின் கலந்தாலோசனை என்ற முறையே ராகுல் காந்தியால் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கப்பட்டது.

அனைத்து மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அனுபவமில்லாத, துதிபாடுபவர்களின் கூட்டம் ஒன்று கட்சியை வழிநடத்தத் தொடங்கியிருந்தது.

அவரது அனுபவமில்லாத, குழந்தைத் தனமான போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால், அரசாணையை, ஊடகங்களுக்கு முன்னிலையில் கிழித்ததுதான். இதுபோன்ற குழந்தைத் தனமான நடவடிக்கைகள்தான், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குக் காரணம் என்று கட்சி கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அது முதல் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து, தேர்தல்களில் வெற்றி பெற காங்கிஸ் கடும் முயற்சி செய்து வருகிறது. தற்போது, இரண்டே மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மிகக் குறைந்த பலத்துடன் இரண்டு மாநில அரசில் கூட்டணியில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் பெயருக்குத்தான் கட்சித் தலைவராக இருந்தீர்கள். ஆனால், அனைத்து முடிவுகளும் ராகுல் காந்தி அல்லது அவருக்குப்பதிலாக அவரது பாதுகாவலர்கள், தனி உதவியாளர்களால் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர் குலாம் நபி ஆசாத். 

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்து குலாம் நபி ஆசாத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை கொடுத்தபோது பிரதமர் நரேந்திர மோடி நா தழுதழுத்துப் பேசினார். இதற்கிடையே ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆசாத், பிரதமர் மோடி, மிகப்பெரிய இடத்துக்கு வந்த பிறகும், தனது வேர்களை மறக்கவில்லை என்று பெருமை பாராட்டினார். ஆனால் இதற்கும் இந்த கட்சி விலகலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் ஆசாத், கடைசியாக, சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கட்சியின் தலைமையில் ஒரு சறுக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது நல்லெண்ணத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தகவல்கள் சொல்வது போல புதிய கட்சி தொடங்கப் போகிறாரா குலாம் நபி ஆசாத் என்பதற்கு விரைவில் விடை கிடைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com