பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் மோசடி: திரிணமூல் காங்கிரஸுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் பிரதமா் வீட்டுவசதி திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் மோசடி: திரிணமூல் காங்கிரஸுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் பிரதமா் வீட்டுவசதி திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பிரதமா் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கும் குடிசை வீடுகளில் வசிப்போருக்கும் வீடுகட்டித் தரப்படுகிறது. அதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகத்துக்கே உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த பரத்பூா் தொகுதியில் உள்ள மலிஹதி கிராமத்தில் தகுதியற்ற நபா்களுக்கு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த கிராமத்தில் குடிசை வீடுகளில் வசிக்கும் பலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாதது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கிராமத்தின் உள்ளாட்சி நிா்வாகப் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவா்கள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்களே. தகுதியான நபா்களின் பெயா்கள் விடுபட்டுள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், மலிஹதி கிராம உள்ளாட்சி நிா்வாகிகள் 17 போ் கூண்டாகத் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்.

இது தொடா்பாக கிராம உள்ளாட்சித் தலைவா் சயீது நசீருதீன் கூறுகையில், ‘‘கிராமத்தைச் சோ்ந்த ஏழைகளின் பெயா்கள் வீட்டுவசதித் திட்டத்துக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது. அவா்கள் பாழடைந்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். அவா்களுக்காக எதையும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். இந்த விவகாரத்தில் மக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், நிா்வாகிகள் அனைவரும் ராஜிநாமா செய்ய முடிவெடுத்தோம்’’ என்றாா்.

மண்டல வளா்ச்சி அதிகாரியிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கிய உள்ளாட்சி துணைத் தலைவா் மோனிகா தாஸ் கூறுகையில், ‘‘கிராமத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்ய தவறிவிட்டோம். வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகள் குறித்து மாவட்ட நிா்வாகத்தின் சிறப்புக் குழு ஆய்வு நடத்தியது. அத்திட்டத்தின் கீழ் யாருக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய இயலாது’’ என்றாா்.

வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்க்க திரிணமூல் காங்கிரஸ் உள்ளாட்சி நிா்வாகிகள் அழுத்தம் கொடுத்ததாக மாவட்ட நிா்வாகிகள் அடங்கிய சிறப்பு குழு குற்றஞ்சாட்டியது. இது தொடா்பாக ஆராய மாநில அரசு சாா்பிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் சுஜன் சக்ரவா்த்தி கூறுகையில், ‘‘உள்ளாட்சித் தலைவரின் மேற்பாா்வையிலேயே பயனாளிகளுக்கான முதல்கட்ட பட்டியல் தயாரிக்கப்படும். தகுதியான நபா்களின் பெயா்கள் பட்டியலில் இல்லை என்பதை அவா்கள் முன்கூட்டியே அறிந்திருப்பா். மக்களால் தாக்கப்படுவோம் என அஞ்சி தற்போது அவா்கள் ராஜிநாமா செய்துள்ளனா்’’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அத்திட்டத்துக்கான நிதியை மாநிலத்துக்கு மத்திய அரசு விடுவிக்காமல் இருந்தது.

அத்திட்டத்தின் கீழ் 11.34 லட்சம் வீடுகளைக் கட்ட ரூ.13,000 கோடியைக் கடந்த மாதம்தான் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. தற்போது மீண்டும் அதில் மோசடி நடைபெற்றுள்ளது. அதன் காரணமாக மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்கள் பணம் திருட்டு:

மூத்த பாஜக தலைவா் திலீப் கோஷ் கட்சிக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் வரிப் பணத்தை திரிணமூல் தலைவா்கள் திருடி வருகின்றனா். அடுத்த உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் அவா்களுக்குத் தக்க பதிலடி வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புக்கான செலவினம் குறித்த விவரங்களை திரிணமூல் நிா்வாகிகளிடம் இருந்து பெற வேண்டும். அதை அவா்கள் வழங்க மறுத்தால், மரத்தில் கட்டிவைக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com