கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்

கரோனா பேரிடர் காலத்தில் எத்தனையோ தொழில்கள் முடங்கின. ஆனால், முதல் அலையின்போதும், இரண்டாவது அலையின்போதும் அனைத்துக்குமே மறுவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்
கைவீசம்மா.. கைவீசு.. கைவிரிக்கும் மழலையர் பள்ளிகள்

கரோனா பேரிடர் காலத்தில் எத்தனையோ தொழில்கள் முடங்கின. ஆனால், முதல் அலையின்போதும், இரண்டாவது அலையின்போதும் அனைத்துக்குமே மறுவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக, திறப்பதற்கான எந்த வாய்ப்பும் வழங்கப்படாமலேயே இருந்தது மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள்தான்.

சுமார் இரண்டு ஆண்டுகள் திறக்கப்படாமலேயே இருந்த மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், உடனடியாக பள்ளிகளைத் திறக்கும் நிலையில் அவை இல்லை.

தங்களது பிள்ளைகளை எல்கேஜி, யுகேஜிக்கு அனுப்ப தவமாய் தவமிருக்கும் பெற்றோர், எப்போது இந்த பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், மாநில அரசு வெளியிட்ட அறிப்பின்படி, பள்ளிகளை அவ்வளவு விரைவாகத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள்.

தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், பிள்ளைகளை பராமரிப்பவர்கள் என அனைத்தும் 2 ஆண்டுகளில் இழந்தவற்றை மீண்டும் சரி செய்ய வண்டும்.

மீண்டும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க எப்போது அனுமதி கிடைக்கும் என்ற தகவல் எங்களுக்கு உறுதியாகத் தெரியாததால், வாடகைக்கு இயங்கி வந்த பள்ளிகளை, அதன் உரிமையாளர்கள் மூடிவிட்டு, வெளியேறிவிட்டனர்.

அதுமட்டுமா, ஆசிரியர்களுக்கும், குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல், அவர்களையும் வேலையை விட்டுவிட்டு அனுப்பிவிட்டோம். இவ்வளவையும் மிக விரைவாகவும், எளிதாகவும் இழந்துவிட்டோம். ஆனால் இதனை அவ்வளவு எளிதாக மீட்க முடியாது. அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. பணத்தை சேகரிக்க காலம் அதிகம் தேவைப்படுகிறது என்கிறார் மாலினி ஸ்ரீனிவாசன், வேளச்சேரியில் மழலையர் பள்ளியை நடத்தி வருபவர்.

ஒரு சில நாள்களில் எல்லாம் பள்ளிகளைத் திறப்பது என்பது சாத்தியமற்றது. நான் மழலையர் பள்ளிக்காக புதிய இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இதுபோன்ற பள்ளிகள் நூற்றுக்கணக்கானவை இயங்கி வந்தன. ஆனால் பேரிடர் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் காலத்தில் பலவும் மூடுவிழா கண்டுவிட்டன. எத்தனை மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சில மழலையர் பள்ளிகள் மட்டும் பெற்றோரின் ஆர்வத்தைத் தூண்டி, ஆன்லைன் மூலமே வகுப்புகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமுடக்கத்தால் முடக்கப்பட்ட தொழில்கள் அனைத்தும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் மழலையர் பள்ளிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவேயில்லை என்கிறார் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ். கோவர்தன். 

பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதித்தாலும், பெற்றோரிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே பள்ளியை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். 

பிள்ளைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர், அவர்களை பராமரிக்க ஆள்கள் என எல்லோரையும் நியமிக்க வேண்டும். 2 ஆண்டுகளாக மூடியிருந்த கட்டடத்தை தூசு தட்டி புதுப்பிக்க வேண்டும். இதனால் நிச்சயம் பள்ளிகளைத் திறக்க கால அவகாசம் ஆகும் என்று கூறுகிறார்.

இதுபோலவே, மேலும் பல மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளின் உரிமையாளர்களும், இன்னும் கொஞ்ச நாள்கள் நிலைமையை பொறுமையாகப் பார்த்து, பிறகுதான் பள்ளியை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். உறுதியாகத் தெரியாத வரை அவசரப்பட்டு மீண்டும் முதலீடு செய்து கடனாளியாக முடியாது என்கிறார்கள் பலரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com