கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வருகிறது டோக்கனைசேஷன் முறை: என்ன, எதற்கு?
By DIN | Published On : 22nd June 2022 04:45 PM | Last Updated : 22nd June 2022 06:07 PM | அ+அ அ- |

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு வருகிறது டோக்கனைசேஷன் முறை: என்ன, எதற்கு?
பண அட்டைகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை (டோக்கனைசேஷன்) ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே, இந்த டோக்கனைசேஷன் முறைக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதியை ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த நிலையில், தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த வணிகர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், நடைமுறைப்படுத்தும் தேதி ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன?
பண அட்டைகளுக்கு டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டால், ஒரு பண அட்டை என்பதை அதன் சிவிவி எண் போன்ற விவரங்களைக் கொண்டு அறியும் முறைக்கு மாற்றாக, அந்தப் பண அட்டைக்கென்று வழங்கப்படும் டோக்கன் எண் மூலம் அறியப்படும். இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் விவரங்கள் மற்றும் டோக்கனைசேஷன் கோரிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் விவரங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாக இருக்கும். அதாவது ஒரு பணஅட்டையின் பயனாளர், டோக்கனைசேஷன் கோரிக்கையை வணிக நிறுவனத்துக்கு அனுப்பி, அந்த நிறுவனம் அதனை ஏற்று, பண அட்டை நெட்வொர்க்குக்கு இந்த கோரிக்கையை அனுப்பிவைக்கும். அதன்பிறகு, அந்த அட்டை அடையாளப்படுத்தப்பட்ட அட்டை என அழைக்கப்படும்.
இதையும் படிக்க.. கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?
இந்த டோக்கன் எண் என்பது, அந்த அட்டையின் நேரடியான விவரங்களைக் கொண்டிருக்காது. இணையதள பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த டோக்கன் எண் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு கிரெடிட் அல்லது டெபிட் அட்டை டோக்கனைசேஷன் செய்யப்பட்டுவிட்டால், அந்த அட்டையின் விவரங்களை, வணிகர்களோ, பணப் பரிமாற்ற செயலிகளோ, இணையதள விற்பனை நிறுவனங்களோ, அந்த அட்டையின் சிவிவி எண், அந்த அட்டை காலாவதியாகும் தேதி மற்றும் இதர விவரங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியாது.
ஏற்கனவே, வங்கிகள் அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பண அட்டையை டோக்கனைசேஷன் செய்யும் முறை குறித்து தகவல்களை அனுப்பியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...