இந்தியச் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் வேகங்களை சோதித்து, கட்டுப்படுத்தினாலே ஆண்டுக்கு 20,554 உயிர்கள் காப்பாற்றப்படும் என்று லான்சென்ட் இதழ் நடத்திய புதிய ஆய்வுமூலம் தெரியவந்திருக்கிறது.
நாட்டில் சாலைவிபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நான்கு அடிப்படைக் காரணிகளைக் கவனத்தாலே போதும் என்கிறது. அவை, வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருப்பது, சீட்பெல்ட் அணியாதது போன்றவற்றை சரி செய்தாலே, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகளில் 25 முதல் 40 சதவீதம் வரை அதாவது 13.5 லட்சம் சாலை விபத்துகளால் நேரிடும் உயிரிழப்புகளைத் தடுத்துவிட முடியும் என்கிறது புதிய ஆய்வு.
சுமார் 150 நாடுகளில் ஆய்வு நடத்தி, சாலை விபத்துக்களைத் தடுக்க அடிப்படையான காரணிகள் என நான்கு விஷயங்கள் கண்டறிந்து தெளிவுபடுத்தியிருக்கிறது இந்த ஆய்வு.
இதையும் படிக்க.. இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி
இந்தியாவைப் பொருத்தமட்டில், அதிவேகத்தைக் கட்டுப்படுத்தினாலே ஆண்டுதோறும் நேரிடும் 20,554 பலிகளையும், தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் 5,683 பலிகளையும் தவிர்க்கலாம். வாகன ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் எனப்படும் இருக்கைப் பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டால் மேலும் 3,204 உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் லான்சென்ட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், குடிபோதையில் வாகனம் ஓட்டி இறப்பை ஏற்படுத்துவது தொடர்பான சரியான புள்ளிவிவரங்கள் இந்தியாவில் பதிவாகவில்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நேரிடும்போது உயிரிழப்பு ஏற்படுவது சரியாக பதிவு செய்யப்படுவதில்லை அல்லது அதன் பதிவுகளில் சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்படும் பலி எண்ணிக்கை விகிதங்களில் இந்தியாவில் மட்டும் சாலை விபத்துகளால் 2,18,875 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், புள்ளிவிவரங்களை பதிவு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் அதே 2017ல் 1,47,913 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அனைத்து வயதுடையவர்களின் உயிர்பலிக்கு 8வது முக்கிய காரணமாக சாலை விபத்துகள் இருப்பதும் 5 - 29 வயதுடையவர்களின் மரணத்துக்கான முதல் காரணமாக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 14 லட்சம் பேர் பலியாகின்றனர். அது மட்டுமல்ல 5 கோடிப் பேர் காயமடைகிறார்கள். இதில் மிகவும் அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், இந்தியாவில்தான் மொத்த சாலை விபத்து எண்ணிக்கையில் 10 சதவீதம் நிகழ்கிறது. ஆனால், உலகளவில் இயக்கப்படும் ஒட்டுமொத்த வாகனங்களில் இந்தியாவில் இருப்பது என்னவோ வெறும் ஒரே ஒரு சதவீத வாகனங்கள்தான்.