சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் இருந்து ஆயுள்காலத்தை ‘அமிர்தவல்லி’ அதிகரிக்குமா?

சர்க்கரை நோயில் மாரடைப்பு என்பது மிகக் கொடுமையானது. பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதே தெரிவதில்லை.
ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை
ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை


சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் பயம் தான். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது என்பது மிகப்பெரிய சவாலும் கூட. அதை விட அதிக பயமளிப்பது அதன் பின் விளைவுகள். சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் தனக்கு வந்து விடக் கூடாது என மெனக்கெடுப்பவர்கள் ஒரு புறமிருக்க, சர்க்கரை நோயின் பின் விளைவுகளுக்காக மெனக்கெடுப்பவர்கள் இன்னொரு புறம். 

உலக அளவில் இருதய நோய்களால் இறப்பவர்களை விட நீரிழிவு (சர்க்கரை) வியாதியால் இறப்பவர்களே அதிகம். எதிர்பாராத பின் விளைவுகளான நியூரோபதி எனும் நரம்பு சார்ந்த பிரச்னையும், நெப்ரோபதி எனும் சிறுநீரகம் சார்ந்த பிரச்னையும், ரெட்டினோபதி எனும் கண் பார்வை நரம்பு பிரச்னையும், மைக்ரோஅஞ்சியோபதி எனும் சிறு ரத்த நாளங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி ஆயுள்காலத்தை குறைக்கும். 

சர்க்கரை நோயில் மாரடைப்பு என்பது மிகக் கொடுமையானது. பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதே தெரிவதில்லை. ஏனெனில் நாள்பட்ட சர்க்கரை நோயில் அதன் மிக முக்கிய பின்விளைவான டையாபடிக் நியூரோபதியால் பல்வேறு நரம்புகளில் தேய்மானம் ஏற்பட்டு இயல்பான வலி உணரும் தன்மை பாதிக்கப்படுவதே முக்கிய காரணம். அதனால் மாரடைப்பு வந்தால் கூட அந்த வலி உணர முடியாமல் சட்டென உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் இந்த தொற்றா நோய்.  

‘டாக்டர் நான் சர்க்கரை வியாதிக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகிறேன், இருப்பினும் கை கால் எரிச்சல் வருது, சில சமயத்தில் மதமதப்பு உள்ளது, கால் வீக்கம் இருக்கு, லேசா கிட்னியின் செயல்பாடு குறைந்து இருக்குனு சொல்றாங்க, அதோடு கண் பார்வையும் குறைந்துள்ளது, என்று மருத்துவம் மேற்கொண்டும், ஏன் இந்த பின் விளைவுகள்? என்று வருத்தப்படும் பலரும், ‘எல்லாத்துக்கும் நான் தனி தனி மருந்து எடுத்துகிட்டே தான் வரேன், அப்போது கூட என் பிரச்னை தீர மாட்டேங்குது’ என்று மனம் உடைந்து சளைக்காமல் மருந்து பெட்டியை திறந்து மருந்து எடுத்துக்கொள்ளும் பலருக்கும் தேவையானது உண்மையில் ‘அமிர்தம்’ தான். 

டாக்டர் என்னுடைய சர்க்கரை நோய் சார்ந்த எல்லா பிரச்னைக்கும் ஒரே மருந்து தீர்வாக கிடைக்குமா?, சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? என்று மனம் தயங்கி சித்த மருத்துவரை அணுக நினைக்கும் பலருக்கும் அமிர்தமாக உதவ காத்துக்கொண்டுள்ளது இந்த ‘அமிர்தவல்லி’  அல்லது ‘சீந்தில்’ எனும் மூலிகை.

சீந்தில்’ எனும் மூலிகை

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு முதல் காரணமாக அறியப்படுகின்ற வாதம்,பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றத்தையும் நீக்கி நோய் வராமல் தடுக்கவும், நோய் நிலையில் இருந்து காக்கவும் வல்லது இந்த சீந்தில். மூன்று குற்றங்களிலும் பித்த குற்றத்தை முதன்மையாக தணிக்க வல்லது இதன் சிறப்பு. மேலும் இதன் ‘அமிர்தவல்லி’ என்ற பெயர்க் காரணத்தை அறிய முற்பட்டால், அமிர்தம் உண்டவனுக்கு எப்படி சாகா வரம் கிடைக்குமோ! அதே போல் சீந்திலை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய மருத்துவ பலன் கிட்டும் என்பதும்,  உடலில் அமிர்தமாகிய இன்சுலின் போன்ற இயற்கை ஹார்மோன்களின் சுரப்பை சீர் செய்து நோயற்ற வாழ்வினை நெடுநாள் வாழ வழி வகை செய்யும் என்றும் பொருள்படும்படி உள்ளது.

இருதய வடிவிலான இலைகளை கொண்ட ,பற்றி ஏறும் கொடி வகையான சீந்தில் மூலிகையில் எண்ணற்ற மருத்துவ குணம் மிக்க வேதிப்பொருள்கள் இயற்கையாகவே உள்ளன. 

இதன் முற்றிய தண்டுப்பகுதியில் அல்கலாய்டுகள், டானின்கள், கார்டியாக் கிளைகோசைடுகள், பிளாவனாய்டுகள், சபோனின்கள் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற பல வேதிப்பொருள்களை கொண்டது. அதிக கசப்பு சுவையுடைய இந்த தண்டுப்பகுதி, அதிக மருத்துவ தன்மை உடையது. இதனை கொண்டு செய்யப்படும் ‘சீந்தில் சர்க்கரை’ எனும் மருந்து மிகப்பிரபலமானது. இது டயாபெடிக் நியூரோபதியில் நல்ல பலன் தரும்.

சீந்திலில் உள்ள முதன்மை மூலக்கூறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதாகவும், இருதயத்தை வலுப்படுத்துவதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், மூட்டு வீக்கத்தை குறைக்கவும், வீக்கமுருக்கியாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும், அதிகரித்த உடல் வெப்பத்தை குறைப்பதாகவும், பல்வேறு ஆடோ இம்யூன் நோய் நிலையிலும் உடலை வன்மைப்படுத்தும் தன்மையும், லேசாக சிறுநீர் பெருக்கி செய்கையும் உடையது. 

சிறப்பு என்னவெனில் சித்த மருத்துவத்தில் சுரத்திற்காக பயன்படுத்தப்படும் நிலவேம்பு குடிநீர், கப சுர குடிநீர் போன்ற அநேக மருந்துகளிலும் சீந்தில் சேருகின்றது.

சீந்தில் தண்டில் உள்ள ஐசோகுயினோலின் வகை அல்கலாய்டுகளான ஜாட்ரோரைசின் மற்றும் மாக்னோஃப்ளோரின் ஆகிய வேதிப்பொருள்கள் நம் உடலில் இன்சுலின் போல பிரதிபலித்து சர்க்கரை அளவை குறைக்க ஏதுவாக உள்ளது .மேலும் இவை கணையத்தில் பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலின் வெளியீட்டுக்கு உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

சீந்தில்’

மற்றொரு முக்கிய ஐசோகுயினோலின் வகை மூலக்கூறான 'பெர்பெரின்' நீரிழிவு நோய்க்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனும் தடையை நீக்கி வளர்ச்சிதை மாற்ற நோய்களை தடுக்கும் தன்மையும், உமிழ்நீர், கணைய அமிலேஸ் மற்றும் குளுக்கோசிடேஸ் ஆகிய நொதிகளை தடுக்கிறது, இதனால் உணவு உண்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கும் தன்மையும் உடையது.

மேலும் பல்வேறு வேதிப்பொருள்கள் இதில் இருக்கும் தன்மையால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் கை கால் எரிச்சல் (நியூரோபதி) மற்றும் சிறுநீரக செயல் குறைவு (நெப்ரோபதி), கண் புரை ஏற்படல்  ஆகிய பின் விளைவுகள் வரவிடாமல் தடுக்கும் தன்மையுடையது.  ஆகவே சர்க்கரை வியாதியால் வருத்தப்பட்டு பின் விளைவுகளை கண்டு பயந்து நிற்கும் பலரும் அமிர்தவல்லியாகிய சீந்திலை எடுத்துக்கொள்ள நிச்சயம் ஆயுட்காலத்தை நீட்டி, சாகா வரம் கொடுக்கும்.

சமீபத்தில் அறிவியல் இதழ் ஒன்றில், சீந்தில் பயன்படுத்த கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து வெளியாகி சர்ச்சைக்கு வழிவகுத்தது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. அதில் அமிர்தவல்லிக்கு (சீந்திலுக்கு) மட்டும் விதிவிலக்கு உண்டா என்ன? ஆக சீந்திலை அளவோடு, மருத்துவ ஆலோசனையோடு பயன்படுத்த வளமோடு வாழ முடியும். இது சித்த மருத்துவத்தின் காய கற்ப மூலிகை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com