'செத்துப்போன' சென்னை ஆறுகள்!

சிங்காரச் சென்னைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்  அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் அனைத்தும் எவ்வித பயனும் இல்லாமல் செத்துவிட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்க தெரி
அடையாறு
அடையாறு


சென்னை: சிங்காரச் சென்னைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்  அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் அனைத்தும் எவ்வித பயனும் இல்லாமல் செத்துவிட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்க தெரிவித்துள்ளது.

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்துக்குள் இருக்கும் அனைத்து நீர்நிலைகளின் மாதிரிகளும் திரட்டப்பட்டு, 32 அளவுகோள்களுடன் பரிசோதிக்கப்பட்டது. இதில், சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் தண்ணீரில் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று எவர் ஒருவராலும் சொல்லிவிட முடியும். ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால், இந்த மூன்று நீர்நிலைகளின் தண்ணீரும் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தவே முடியாது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் 41 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், ஓரிடத்தில் கூட, அந்த நீரில் ஆக்ஸிஜன் கலந்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஆறுகளில் விடப்படும்போது, அதில் உயிரி ஆக்ஸிஜன் 20 சதவீதத்துக்கு மேல் இருக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் உயிரி ஆக்ஸிஜன் அளவு 56க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் நீர் கூவத்திலும், பெருங்குடி நீர் அடையாறு ஆற்றிலும் கலக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு லிட்டர் ஆற்று நீருக்கு 700 முதல் 5000 மில்லி கிராம் வரை திடக்கழிவு இந்த ஆற்று நீரில் கலக்கப்படுவதாகவும், ஆற்று நீரில் கலக்கப்படும் உலோகக் கழிவு காரணமாக நீரின் கடத்தல் திறன் அதிகமாக இருப்பதாகவும், ஒரு லிட்டர் தண்ணீரில் 70 - 300 மில்லி கிராம் வரை மனிதக் கழிவுகளும், 300 முதல் 1500 மில்லி கிராம் வரை நுண்கிருமிகள் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் கூட, இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் ஆக்ஸிஜன் கலக்க முடியாத அளவுக்கு, அதன் முகத்துவாரத்துக்கு அருகிலேயே தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூற்றோ வேறு மாதிரி உள்ளது. அதாவது, சென்னையில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஆறுகள் செத்து பல காலம் ஆகிவிட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுகள் இன்று அதனை உறுதி செய்துள்ளன. அவ்வளவே. இந்த ஆறுகளில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் குடிநீர் ஆதாரமாக இருந்த 1800ஆம் ஆண்டுகளிலேயே அது சாகத் தொடங்கிவிட்டன. இதனுடன் நகரமயமாதல் எனும் செயலாக்கம் இணைந்து கொண்டதால், மிக விரைவாகவே ஆறுகள் செத்துவிட்டன என்கிறார்கள்.

ஆறுகளை பாதுகாக்க பல்வேறு காலக்கட்டத்தில் அரசுகளால் நிதி ஒதுக்கப்பட்டு வந்தாலும், செத்து பல காலம் ஆண ஆறுகளை மீள்உருவாக்குவதில் இதுவரை எந்த பயனும் கைகூடவில்லை.

ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை தடுக்க, கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை ஒட்டி 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன அவ்வளவே.

இது தொடர்பான ஆய்வறிக்கை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளும் முன்வந்து, செத்துப்போன ஆறுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com