திருநர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் 'பிரைட் புராஜெக்ட்' திட்டத்தை தொடங்கியருக்கிறது கேரள அரசு.
இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருநர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும், சமூகத்தாலும் உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்டு தனது சொந்த முயற்சியினால் முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் முயற்சியில் 'பிரைட் புராஜெக்ட்' என்ற புதிய திட்டத்தினை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க.. காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண்
பல வளர்ந்த நாடுகளோடு ஒப்பிகையில் இந்தியாவில் இன்னமும் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் பலவழிகளில் சமூகத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை கொடுக்கவோ, வாடகைக்கு வீடு கொடுக்கவோ பலர் விரும்புவதில்லை.
பொதுவாக தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்குவதில் தயக்கம்காட்டுகின்றன. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக ஒரு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். அதே போன்றுதான் திருநர்களும் தனியார் நிறுவனங்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால் இதுவரை திருநர்களுக்கான ஆணையம் உருவாக்கப்படவில்லை.
தமிழகத்தில் 2015 ஆண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திருநங்கைகள் பாதுக்காப்புக்காக தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். தமிழகத்தில் முதன்முறையாக திருநர் மேம்பட்டு வாரியம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு கேரளம் உட்பட 11 மாநிலங்களில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து திருநர்களுக்காக கேரள அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
திருநர்களுக்காக கேரளா அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள்
சாகல்யம் - திருநர்களுக்கான தொழிற்பயிச்சி அளிக்கும் திட்டம்
வர்ணம் - திருநர்களுக்கான தொலைதூரக்கல்வி வழங்கும் திட்டம்
யத்னம் - திருநர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்
ஸஃப்லம் - திருநர்களுக்கான தொழிற்கல்வி அளிக்கும் திட்டம்
2018 ஆம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் திருநர்களுக்காக 2 இலட்சம் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்தது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவ உதவிக்காக மாதம் 3000 என ஒரு வருடம் வழங்கப்படுகிறது. மேலும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் திருநர்களுக்கு திருமண உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுபோல கேரள அரசு தொடர்ந்து திருநர்களுக்கான வாழ்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுப்பு நடவடிக்கைளை செயல்படுத்தி வருகிறது.
இந்த பிரைட் புராஜக்ட் திட்டமானது திருநர் சமூகத்திற்கு திருநாள் சுயதொழில் தொடங்குவதற்கும் மேலும் மற்றவர்களைப்போன்று அவர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கும் முக்கியமானதாக இருக்கும். இதன்மூலமாக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தங்கள் வாழ்க்கையை தாமாகவே வடிவமைத்துக்கொள்ளலாம். இந்த திட்டமானது திருநர் சமூகத்தினருக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்று இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் திருநர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.