புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,186 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், ரூ. 9.46 கோடி சமரசத் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் மணிக்குமார் வழிகாட்டுதலில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவரும், புதுச்சேரி தலைமை நீதிபதியுமான பி.தனபால் தொடக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான வ.சோபனாதேவி மேற்பார்வையில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய அமர்வுகள் அமைக்கப்பட்டு, நீண்ட காலமாக தீர்க்கப்படாத வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. புதுச்சேரியில் 10 அமர்வுகள், காரைக்காலில் 2 அமர்வுகள், மாஹே, ஏனாம் பகுதியில் தலா ஒரு அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன்} மனைவி பிரச்னை தொடர்புடைய வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என நிலுவை, நேரடி வழக்குகள் என மொத்தம் 8,176 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இவற்றில் 1,186 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 9,46,63,816 சமரச தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது. மேலும், 811 நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கும் இதில் தீர்வு காணப்பட்டது.