/

மதுரை காமராஜர் பல்கலை.யில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், ஊதியம் கேட்டுப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தினர். 

News image
போராடும் கௌரவ விரிவுரையாளர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், ஊதியம் கேட்டுப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தினர்.   

பல்கலைக்கழகத்தின் கீழ் சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, கோட்டூர், வேடசந்தூர், திருமங்கலம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் 400-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கோடை விடுமுறையான மே மாதம் தவிர்த்து இதர பதினோரு மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கரோனா  பொது முடக்கத்தை முன்னிட்டு மார்ச் 16 முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மே மற்றும் ஜூன் மாத ஊதியமும் வழங்கப்படாது என்று பல்கலைக்கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து துணைவேந்தர் மு.கிருஷ்ணன், பதிவாளர் வசந்தா ஆகியோர் கௌரவ விரிவுரையாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருவார காலத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி  அளித்ததை தொடர்ந்து  போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.