தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த பிரபு, இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
விரக்தியடைந்த பவித்ரா இன்று (செவ்வாய்க்கிழமை) தனது இரு குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். அதன்பின் தானும் அந்த விஷத்தை குடித்து இருக்கிறார். இதனையடுத்து விஷம் குடித்து இருப்பதாக தனது தாயாரிடம் செல்போனில் கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த பவித்ராவின் தாய் கன்னிசேர்வைபட்டியில் இருக்கும் தனது தம்பி செந்திலிடம் மகள் விஷம் அருந்திய தகவலை தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு சென்ற செந்தில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தாய் மற்றும் இரு குழந்தைகளை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
பரிசோதனை செய்த மருத்துவர் இரு குழந்தைகளும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், பவித்ரா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.