கரோனா நோய்த் தொற்றுப் பொது முடக்கம் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகிதம் சுருங்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நாலாவது முறையாக, தாராளமயத்துக்குப் பின் முதன்முறையாக நேரிடும் இந்தப் பொருளாதாரப் பின்னடைவால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பன்னாட்டுப் பொருளியல் பகுப்பாய்வு நிறுவனமான "கிரிசில்" தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டில் முதல் காலாண்டில் (ஏப். முதல் ஜூன் 2020) 25 சதவிகிதம் குறைந்துவிடும் என்றும் கிரிசில் குறிப்பிட்டுள்ளது.
"உள்ளபடியே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் நிரந்தரமாகவே இழக்கப்பட்டுவிடும், எனவே, கரோனாவுக்கு முன்னர் இருந்த வளர்ச்சி விகிதத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிச்சயம் இந்தியாவால் மீண்டும் எட்ட இயலாது."
"கடந்த 69 ஆண்டுகளில் மூன்று முறை - 1958, 1966, 1980 நிதியாண்டுகளில் - இந்தியா பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. மூன்று முறையும் பருவ மழை பொய்த்ததும் வேளாண்மை பாதித்ததும் அதன் தொடர்ச்சியான பொருளாதார விளைவுகளுமே காரணமாக இருந்தன."
"ஆனால், இந்த முறை நிலைமை வேறு மாதிரியாக, வேளாண் சாகுபடி நம்பிக்கையளிப்பதாக இருக்கிற நிலையில், பொருளாதாரப் பின்னடைவு நேரிட்டுள்ளது" (வெட்டுக்கிளிகள் பிரச்சினை வேறு இருக்கிறது).
முதன்முதலில் மார்ச் 25 தொடக்கம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பொருளாதாரச் செயல்பாடுகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வேளாண் சாரா பொருளாதாரம் முற்றிலுமாக ஒன்றுமில்லாமல் போய்விட்டிருப்பது, முதல் காலாண்டில் மட்டுமல்ல, வரும் காலாண்டுகளிலும் கல்வி, போக்குவரத்து, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்படும். வேலைகளும் வருமானங்களும் பெருமளவில் இழக்கப்படும் என்று கிரிசில் சுட்டிக்காட்டியுள்ளது.